கிள்ளான், மே 12- கோலக் கிள்ளான், லிம்போங்கானில் அமைந்துள்ள ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழாவில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கலந்து கொண்டார்.
இந்த விழாவில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் தக் சீ, கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி, கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு நடத்தப்படும் இரத, காவடி ஊர்வலம் உள்ளிட்ட சமய நிகழ்வுகள் நாட்டின் பன்முக கலாசாரத் தன்மையையும் இந்துக்களின் பாரம்பரிய சம்பிரதாயத்தின் அழகியலையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
இன்று சித்ரா பௌர்ணமி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் தாம் இனிய சித்ரா பௌர்ணமி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
ஒவ்வோராண்டும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் இந்த சித்ரா பௌர்ணமி நாம் பாவங்களைப் போக்கி அதன் மூலம் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு உன்னத நாளாக விளங்குகிறது. இந்த நாளில் செய்யும் தர்மங்கள், தானங்கள் மற்றும் வழிபாடுகள் இறைவனின் ஆசீர்வாதத்தை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும்.
மலேசியாவில் தெலுக் இந்தான், கோலக் கிள்ளான் உள்ளிட்ட நகர்களில் இந்த சித்ரா பௌர்ணமி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.








