கிள்ளான், மே 6 - வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியாக
கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (எம்.பி.டி.கே.) அதிகார வரம்பிற்குட்பட்ட
பகுதிகளில் 33 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி செலவில் 17 வெள்ளத்
தடுப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளன.
குழாய் மதகுகளை அமைப்பது, கால்வாய்களை அகலப்படுத்துவது,
பாலங்களை தரம் உயர்த்துவது ஆகியப் பணிகளை உள்ளடக்கிய
இத்திட்டம் இவ்வாரம் தொடங்கி வரும் அக்டோபர் மாதம் முற்றுப் பெறும்
என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ
இஷாம் ஹஷிம் கூறினார்.
அடைமழை பெய்யும் போதெல்லாம் வெள்ளம் ஏற்படக்கூடிய 13
இடங்களை கிள்ளான் முழுவதும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
அவற்றில் மேரு மற்றும் பண்டமாரான் ஆகிய பகுதிகளும் அடங்கும்.
இதன் அடிப்படையில் இப்பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணும் வகையில் 17 வெள்ளத் தடுப்புத் திட்டங்களை நாங்கள் அமல்படுத்துகிறோம் என்று அவர் சொன்னார்.
முறையாகத் திட்டமிடப்படாத அதாவது சிறுகால்வாய் உள்ளிட்ட நீரோட்ட
வசதிகள் இல்லாத கிராமப்புறங்களையும் இந்த வெள்ளத் தடுப்புத் திட்டம்
உள்ளடக்கியிருக்கும். மீண்டும் வெள்ளம் ஏற்படாமலிருப்பதை உறுதி
செய்வதற்கு ஏதுவாக நிலங்களை வாங்குவது உள்ளிட்ட சில தீவிர
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்ட அமலாக்கம் கிள்ளான் அரச மாநகர் மன்றம், வடிகால் மற்றும்
நீர்பாசனத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களுடன்
ஒருங்கிணைக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
கிள்ளான் அரச மாநகர் மன்றப் பகுதியில் அடிப்படை வசதி திட்ட மேம்பாடு தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேனும் கலந்து கொண்டார். கிள்ளான் வட்டாரத்தில் வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையின் வாயிலாக
பல்வேறு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கு 4 கோடியே
75 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக இஷாம் முன்னதாகக்
கூறியிருந்தார்.


