கிள்ளான், ஏப்ரல் 28 - உணவுக் கடை உரிமையாளர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை உதவியாளர்களாகப் பணியமர்த்துவத்துவதற்கு வரும் ஜூன் 1ஆம் தேதி முதல்
தடை விதிக்கும் கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் நடவடிக்கையை பண்டமாரன் சட்டமன்ற உறுப்பினர் வரவேற்றுள்ளார்.
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்புகளைத் ஏற்படுத்தித் தருவதற்கும் இந்தத் தடை முக்கியமானது என்று லியோங் தக் சீ கூறினார்.
வரும் ஜூன் 1 முதல் இந்தத் தடையை அமல்படுத்தும் மாநகர் மன்றத்தின் நடவடிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். மேலும் இந்தக் கொள்கை செயல்படுத்தப்படுவதை மாநகர் மன்ற உறுப்பினர்கள் அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் தொழிலாளர்களைப் பெறுவதில் சிரமம் இருந்தால் பொருத்தமான செயலாக்க முறையை மீண்டும் விவாதிக்கலாம் என்று அவர் கூறினார்.
பண்டமாரான் விளையாட்டு வளாக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலவச சுகாதார பரிசோதனை திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாட்டு தொழிலாளர்களின் நோய் எதிர்ப்பு நிலையை உறுதிப்படுத்த முடியாத காரணத்தால் நாட்டில் காசநோய் உள்ளிட்ட நோய்த்தொற்று அபாயங்கள் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
இதன் அடிப்படையில் உள்ளூர்வாசிகள், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் உணவு அங்காடிகள் அல்லது கடைகளில் வேலை செய்து வருமானம் பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
அதே சமயம், தங்களின் கடைகளை அதிக விலையில் பிறருக்கு மீண்டும் வாடகைக்கு விடுவதன் மூலம் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாய்ப்பை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்றும் அவர் கடை உரிமையாளர்களுக்கு நினைவூட்டினார்.


