ஷா ஆலம், ஏப்ரல் 22: சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பராய்டு இன்று மீடியா சிலாங்கூர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த போது ஏழ்மை ஒழிப்பு குறித்து மாநில மத்திய அரசுகளின் சில முக்கிய முன்னெடுப்புகள் குறித்து விவரித்தார்.
தொழிலாளர்களுக்கு இன்றைய அரசு பல மேம்பாடுகளை செய்து வருவதாகவும் அதில் உயர்ந்த RM 1700 அடிப்படை சம்பளம் குறித்தும் குறிப்பிட்டார். நமது தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை சம்பளத்துக்கு பல ஆண்டுகள் போராடி குறிப்பாக நீதிமன்ற போராட்டத்திலும் தோல்வி கண்ட காலத்தையும் இன்றுள்ள நிலை உடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சிலாங்கூர் தொழிலாளர்களுக்கும் வருமானத்தை அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் வழங்கப்படுகிறது அதனை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் .
20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறைகள் இப்பொழுது இல்லை. அன்று உயர் கல்விக்கு பல்கலைக்கழகங்களில் நுழைவது ஒரு பெரிய சவால். ஆனால், இப்பொழுது வேலை செய்பவர்களும் மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசு மற்றும் மித்ரா போன்ற இயக்கங்கள் மூலம் பல தொழில் (திவேட் திட்டம்) கல்வித் திட்டங்களின் வழியும் உயர் கல்வி பெறலாம் .
தன்முனைப்பு கொண்டவர்களுக்கும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்களுக்கு திவேட் திட்டங்களின் வழி பட்டதாரியாகவும், உயர் வருமானம் உடையவர்களாக மாறவும் இப்பொழுது நிறைய வாய்ப்புகள் உண்டு என்றார்.
கல்வி அறிவு குறைவானர் என எவரும் வருந்த வேண்டாம். அவர்களுக்கும் உதவும் வகையில் வியாபார உபகரணங்கள் , அதற்கான வழிமுறை மற்றும் பயிற்சி திட்டங்களும் சிலாங்கூர் ஐ-சீட் மற்றும் புளுபிரிண்ட் மற்றும் மித்ரா வழி வழங்கப்படுகிறது. சிறு கடன் வழங்க ஹிஜ்ரா, பேங் ராயாட் கடனுதவி திட்டங்களும் உண்டு.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு குறிப்பாக நகர்ப்புறங்களில் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு ஆண்டு முழுவதும் உதவ சிலாங்கூர் மலிவு விற்பனை , ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டங்களும் உண்டு. அதே வேளையில் சிலாங்கூரில் எல்லா மாநகராட்சி மற்றும் நகராட்சிகளும் இலவச பொது போக்குவரத்து சேவையும் வழங்கி வருகின்றன.
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி பேருந்து கட்டண உதவியுடன் மத்திய அரசு வருட ஆரம்பத்தில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் 150 வெள்ளி நிதி புதிய பள்ளி பருவங்களை நல்ல முறையில் தொடங்க உதவி வருகிறது. பாலர் பள்ளி குழந்தைகளுக்கு மாதாந்திர கட்டண உதவி முதல் பிங்காஸ் திட்டம் மற்றும் உயர்கல்விகூட நுழைவு நிதியுதவி போன்றவைகளின் வழி சிலாங்கூர் உதவி வருகிறது.
இப்பொழுது சாரா உதவி திட்டத்தின் வழி மத்திய அரசு Rm 50 முதல் Rm200 வெள்ளி வரை மாதந்தோறும் உதவி பெறுபவர் அடையாள அட்டைகளில் வரவு வைத்து வருகிறது.


