ஷா ஆலம், ஏப். 11- இரவு முதல பெய்து வரும் அடைமழையின்
காரணமாக நீர் மட்டம் இரண்டு அடி வரை உயர்ந்ததைத் தொடர்ந்து
தாமான் ஸ்ரீ ஜெயா, ஜாலான் மேரு, கிள்ளான் உள்ளிட்ட இடங்களில் பத்து
வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
வெள்ளம் தொடர்பில் இன்று விடியற்காலை 4.00 மணிக்கு தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து காப்பார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த குழு
அதிகாலை 4.27 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்ததாக சிலாங்கூர்
மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை அறை
தெரிவித்தது.
அப்பகுதியில் ஏற்பட்ட சுமார் இரண்டு அடி வெள்ளத்தில் பத்து வீடுகள்
பாதிக்கப்பட்டன. எட்டு பேர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ள வேளையில்
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று செயலாக்க
கட்டளை அதிகாரியின் அறிக்கை கூறியது.
இந்த மீட்புப் பணியில் ஸ்ரீ அண்டாலாஸ் தீயணைப்பு நிலையத்தின்
உறுப்பினர்கள் உள்பட 12 பேர் பங்கு கொண்டனர்.
மேலும், இன்று அதிகாலை கம்போங் சுங்கை மெராப் லுவார் காஜாங்கில்
ஏற்பட்ட வெள்ளத்தில் 12 வீடுகளைச் சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்ட வேளையில்
அங்கு வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது.
இதனிடையே, கிள்ளான் மாவட்டத்தின் தாமான் ஸ்ரீ மூடா, பெக்கான்
மேரு, கிரிஸ் நினைவுச் சின்னம், தாமான் டேசா கெமுனிங் ஆகிய
பகுதிகளில் உள்ள நிலையங்களில் நீர் மட்டம் இன்று காலை 7.45 மணி
நிலவரப்படி அபாயக் கட்டத்தில் இருந்தது.


