ஷா ஆலம், ஏப். 8 - சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டில் ரமலான் மாதத்தின் கடைசி மூன்று நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்ட மெகா ஏஹ்சான் ஐடில்பித்ரி மலிவு விற்பனை வழி 434,000 வெள்ளிக்கும் அதிகமானத் தொகை பதிவு செய்யப்பட்டது.
மொத்தம் 12 இடங்களில் நடைபெற்ற இந்ந விற்பனைக்கு மாநில அரசு 120,000 மதிப்பிலான மானியத்தை வழங்கியது என்று பி.கே.பி.எஸ். குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ வீரா டாக்டர் முகமட் கைரில் முகமட் ராஸி கூறினார்.
இந்த விற்பனை மார்ச் 26 முதல் 28 வரை நடைபெற்றது. முதல் நாளில் 156,553 வெள்ளிக்கு விற்பனை நடைபெற்றது. இரண்டாவது நாளில் 130,000 வெள்ளியாகவும் கடைசி நாளில் 149,000 வெள்ளியாகவும் விற்பனை பதிவானது என அவர் சொன்னார்.
விற்பனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் வாடிக்கையாளர்கள் நிரம்பி காணப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் நோன்புப் பெருநாள் பண்டிகையைக் கொண்டாடுவதற்குத் தேவையான கோழி, முட்டை, இறைச்சி மற்றும் அரிசி போன்ற பொருள்களை வாங்கினர் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு பண்டிகை காலத்திலும், சிலாங்கூர் அரசு ஒரு பண்டிகை கால மெகா விற்பனை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளி சந்தைகளுடன் ஒப்பிடும்போது இங்கு குறைந்த விலையில் பொருள்கள் விற்கப்படுகின்றன.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 12.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ
சமையல் எண்ணெய் 2 கிலோ 10.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
மேலும், இந்த விற்பனையில் புதிதாக சார்டின் (வெ.5.50), மீகூன் (வெ.2.50), சோள பிஸ்கட் (வெ.3.00), சலவை சோப்பு (வெ.16.00) மற்றும் குழந்தைகளுக்கான பெம்பர்ஸ் (வெ.12.00) ஆகிய பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


