ஷா ஆலம், ஏப். 8 - ஸ்ரீ கெம்பங்கான் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் நட்புறவு திட்ட (எஸ்.எம்.யு.இ.) உறுப்பினர்கள் இப்போது முதல் எதிர்வரும் ஜூன் 30 வரை 150 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இரண்டாம் கட்ட விநியோகத் திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் ஸ்ரீ கெம்பங்கான் தொகுதி சமூக சேவை மையத்தில் அந்த பற்றுச்சீட்டுகளைக் கோரலாம் எனகனதொகுதி சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி கூறினார். பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைவுறுத்தினார்.
ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பிறந்தநாளைக் கொண்டாடுபவர்களுக்கு இந்தப் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அவர்கள் அன்றாடத் தேவைக்கான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். இத்திட்டம் அவர்களின் நிதிச் சுமையை ஓரளவு குறைக்கும் என்று நம்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த இரண்டாம் கட்ட விநியோகத் திட்டத்தில் மொத்தம் 2,217 பயனாளிகள் பலன்களைப் பெற இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முக்கியமான அறிவிப்புகள் மற்றும் தகவல்களைத் தவறவிடாமலிருக்க தொலைபேசி எண்கள் மற்றும் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை உறுப்பினர்கள் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும் என்றும் சியு அறிவுறுத்தினார்.
முதல் கட்ட பற்றுச்சீட்டு விநியோகத்தின் போது பலர் தங்கள் தரவுகளைப் புதுப்பிக்கத் தவறியதால் சமீபத்திய தகவல்களைப் பெற இயலவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.


