ஷா ஆலம், மார்ச் 26- நீர் தூய்மைக்கேடு பிரச்சினைகள் மற்றும் நீர்வள மேலாண்மையை நிவர்த்தி செய்வதில் சிலாங்கூர் அரசாங்கத்தின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக மூல நீர் உத்தரவாதத் திட்டம் (எஸ்.ஜே.ஏ.எம்.) விளங்குகிறது.
மிகவும் ஆக்ககரமாக நீர் மாசுபாடு தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நீர் வள மேலாண்மையின் செயல்திறன் மற்றும் மீட்சித்தன்மையை அதிகரிப்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மூல நீர் உத்தரவாதத் திட்டம் என்பது நீர் சேகரிப்பு குளங்களின் ஒருங்கமைப்பை உருவாக்குவது, உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் புதிய கால் வாய்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என அவர் சொன்னார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட ஹோராஸ் எனப்படும் ஹைப்ரிட் ஆற்றோர நீர் சேகரிப்பு திட்டம் மூலம் மூல நீர் போதுமான அளவு இல்லாத பிரச்சினையை நாங்கள் நிவர்த்தி செய்கிறோம். நீர் சேமிப்பு (ஹோராஸ்) ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த மூல நீர் உத்தரவாதத் திட்டம் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவடையும். நீர் மாசுபாடு ஏற்படும் பட்சத்தில் அந்த நீரை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஒரு புதிய கால்வாய் வழியாக நேரடியாக கடலுக்குள் விடுவிப்போம் என்றார் அவர்.
நாங்கள் குளத்திலிருந்து நீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு உறிஞ்சுகிறோம். இந்த சேமிப்பு நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். வழக்கமாக, இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும் நீர் சேமிப்பு மூலம் நீர் சுத்திகரிப்பு மையங்கள் நிறுத்தப் படுவதைத் தவிர்த்து குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்குள் மாசுபாட்டைக் கையாள முடியும் என்று அவர் கூறினார்.


