ஷா ஆலம், மார்ச் 26 — சிலாங்கூரின் முதலீடு கடந்தாண்டு 10,100 கோடி வெள்ளியாக வியக்கத்தக்க வகையில் உயர்வு கண்டதற்கு தொழில்துறை சார்ந்த மனித வளங்கள் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஒரு முக்கிய காரணமாக விளங்கியது.
இந்த முதலீட்டு அளவு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 5,500 கோடி வெள்ளி இலக்கை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.
சிலாங்கூரின் திறன் மேம்பாடு மற்றும் மறு திறன் திட்டங்கள் தற்போது உள்ள திறமைக்கும் தொழில்துறை தேவைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் அதே வேளையில் உயர் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க உதவியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் திறன்களைக் கொண்ட தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆகவே சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையத்தை நிறுவுவதன் மூலமாகவும் ஊழியர் திறன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதன் வாயிலாகவும் நாங்கள் இதை நிவர்த்தி செய்கிறோம் என்று அவர் சொன்னார்.
அதிக வருமானம் தரும் வேலை வாய்ப்புளை உருவாக்குவதற்கான எங்கள் இலக்கிலிருந்து இந்த விழிப்புணர்வு உருவாகிறது. தொழிலாளர்களின் . தற்போதைய திறன்களை நாங்கள் மேம் படுத்துகிறோம். இது முதலீட்டை ஈர்ப்பதற்கான எங்கள் முக்கிய உத்திகளில் இதுவும் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.
இது நமது மனித வளங்கள் தொழில்துறை தேவைகள் மற்றும் கோரிக்கைகளுடன் ஏற்ப அமைவது உறுதி செய்வதாகும் என்று அவர் நேற்றிரவு டிவிஎஸ் விவாத நிகழ்வில் அவர் கூறினார்.
சிலாங்கூர் விரைவான வளர்ச்சிக்கு வலுவான பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது எனக் கூறிய அவர், எனினும், இந்த மேம்பாடு சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும், குறிப்பாக வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பயனளிப்பதை உறுதி செய்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றார்.
எங்கள் வியூகம் மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது - மனித வளங்களின் தரம் மற்றும் திறன்களை மேம்படுத்துவது, உயர் மதிப்புள்ள முதலீட்டாளர்களை ஈர்ப்பது, ஸ்மார்ட் சிட்டி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற உயர் தொழில் நுட்பத் தொழில்களில் ஈடுபடுவது ஆகியவையே அந்த மூன்று அம்சங்களாகும் என்றார் அவர்.
கடந்தாண்டு சிலாங்கூர் மொத்தம் 10,100 கோடி வெள்ளி முதலீட்டைப் பதிவு செய்ததாகவும் இது மாநில அரசின் 5,500 கோடி வெள்ளி இலக்கை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் அவர் முன்னதாக கூறியிருந்தார். .
இந்த மொத்த முதலீடு சிலாங்கூரில் 80,000 முதல் 90,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார், இது மாநிலத்தின் ஒற்றுமை அரசாங்க நிர்வாகத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்ட மிக உயர்ந்த சாதனையாகும்.


