ஷா ஆலம், மார்ச் 17- பிரதமரின் பதவிக் காலத்தை இரண்டு தவணைகளாகக் கட்டுப்படுத்தும் ஜசெகவின் பரிந்துரைக்கு தாம் உடன் படுவதாக பிரதமர் கூறியுள்ளார்.
இரண்டு தவணைகள் அல்லது அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட
பல (சீர்திருத்த) திட்டங்களுக்கு நான் உடன்படுகிறேன்.
காரணம், 22 ஆண்டுகளை எட்டினால் அது நாட்டையே அழித்துவிடும் என்பது எங்களுக்குத் தெரியும் என்று நேற்று ஜசெகவின் பொதுப் பேரவையில் உரையாற்றிய போது அவர் கூறினார்.
பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் அடுத்த ஈராண்டுகளில் கூட்டரசு அரசியலமைப்பில் திருத்தங்ளைச் செய்யும் என்று தாங்கள் நம்புவதாக ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் முன்னதாக தமதுரையில் கூறியிருந்தார்
பதினாறாவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இக்கூட்டணி மீண்டும் அரசாங்கத்தை அமைத்தால் பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளராக அன்வாரை கட்சி தொடர்ந்து ஆதரித்து முன்மொழியும் என்று அந்தோணி லோக் மேலும் கூறினார்.
ஜசெகவின் இந்த பரிந்துரை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், கெஅடிலான் மற்றும் பிற ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளால் இந்தப் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இதற்கான அங்கீகாரத்தைப் பெற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்று கூறினார்.


