உலு சிலாங்கூர், மார்ச் 13 - சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான
ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பயணத் தொடர் பல புதிய அங்கங்களுடன்
எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.
இந்த நிகழ்வை நடத்துவதற்கான பொருத்தமான இடத்தை தாங்கள்
ஆராய்ந்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
தற்போது வரையப்பட்டு வரும் பல்வேறு புதிய நிகழ்வுகளுடன் ஆண்டு
இறுதிக்குள் அனைத்து இடங்களுக்கும் செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
‘ஜியாரா காசே இல்யா‘ திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள வசதி குறைந்த இல்லங்களுக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் என்ற
பெயரில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் இலவச சுகாதாரப்
பரிசோதனை, அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை, காண்காட்சி,
விளையாட்டு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
பெடுலி ராக்யாட் (ஐ.பி.ஆர்.) என்ற திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட
வடிவமான இந்த பயணத் தொடரில் மாநில மக்களுக்குப் பல்வேறு
அனுகூலங்களை வழங்குவதற்காக 35 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது.


