SELANGOR

சிகிஞ்சான் புயல் - பள்ளி, வீடுகளை சீரமைக்க எம்.பி.ஐ. அறவாரியம் வெ.70,000 ஒதுக்கீடு

10 மார்ச் 2025, 7:59 AM
சிகிஞ்சான் புயல் - பள்ளி, வீடுகளை சீரமைக்க எம்.பி.ஐ. அறவாரியம் வெ.70,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், மார்ச் 10- தஞ்சோங் காராங், பாரிட் 4, சுங்கை புரோங்கில் அண்மையில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட பள்ளி மற்றும் வீடுகளை பழுதுபார்க்க சிலாங்கூர் மந்திரி புசார் அறவாரியம் (எம்.பி.ஐ.) 70,000 வெள்ளியை  ஒதுக்கியுள்ளது.

கடந்த வாரம் நிகழ்ந்த   இச்சம்பவத்தில்  சேதமடைந்த பாரிட் 4 தேசியப் பள்ளியின்  கூரையை சரிசெய்ய 50,000 வெள்ளி  செலவிடப்பட்டதாக அதன் தலைவர் அகமது  அஸ்ரி ஜைனல் நோர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் நிதியுதவி கோரி  அமைச்சுக்கு விண்ணப்பம் செய்துள்ளது. ஆனால் நிதி ஒதுக்கீட்டு செயல் முறைக்கு சிறிது காலம் பிடிக்கும்.

எனவே, மழை பெய்தால் நிலைமை மோசமடையாமல் இருக்க முக்கியமான விஷயங்களுக்கு  முன்னுரிமை அளித்து உடனடியாக உதவிகளை வழங்குவோம் என அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்ட வீடுகளைப்  பொறுத்தவரை,  மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு பழுதுபார்ப்பு பணிகளை  ஒருங்கிணைப்பதற்கு முன் வீடுகளின்  கூரையில் தற்காலிக கேன்வாஸ் நிறுவப்பட்டதோடு  எம்பிஐ அறவாரியத்தால்  நியமிக்கப்பட்ட குத்தகையாளர் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டார் என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை, சுங்கை பூரோங், பாரிட் 4  பகுதியில் வீசிய  பலத்த புயல் காற்றால்  எட்டு வீடுகளின் கூரைகள் பறந்தன.  எனினும், காலை 7.30 மணியளவில் நடந்த சம்பவத்தில் யாருக்கும் காயம்  அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை.

வீடுகள் தவிர, பாரிட் 4  தேசியப் பள்ளியின் கூரை, ஆசிரியர் குடியிருப்புகள், கேன்டீன் மற்றும் கார் நிறுத்துமிடம் ஆகியவையும் சேதமடைந்தன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வீடுகள் கடுமையாக சேதமடைந்த அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் மாநில அரசு 500 வெள்ளி உதவித் தொகையை வழங்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.