ஷா ஆலம், மார்ச் 3- இவ்வாண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி சிலாங்கூர் 59 கோடியே 70 லட்சம் வெள்ளி வருமானத்தை பதிவு செய்துள்ளது.
இவ்வாண்டில் 250 கோடி வெள்ளி வருமானத்தை ஈட்டும் மாநில அரசின் இலக்கில் ஏறக்குறைய கால்பகுதி முதல் இரண்டு மாதங்களில் எட்டப்பட்டுவிட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த ஆண்டு நாங்கள் 220 கோடி வெள்ளி வருமானத்தை இலக்காகக் கொண்டோம். ஆனால் 280 கோடி வெள்ளியைப் பெற்றோம். இந்த வருடம் நாங்கள் இன்னும் சிறிது அதிகமாக 240 கோடி அல்லது 250 கோடி வெள்ளியை இலக்காகக் கொண்டுள்ளோம். எனக்கும் பயமாக இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் இலக்கை விட அதிகமாக வருமானம் இருக்கும். இந்த வருடம் அது அதிகமாக இருக்காது என்று நான் பயந்தேன்.
ஆனால், பிப்ரவரி மாதத்திற்குள் வருமானம் 59.7 கோடி வெள்ளியை நெருங்கிவிட்டது. அதாவது, முதல் இரண்டு மாதங்களில் 200 கோடி வெள்ளியில் கால் பங்கை நாங்கள் பெற்றுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று சிலாங்கூர் எப்.எம். ஏற்பாட்டிலான 'தே தாரிக், கோப்பி ஓ' நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
சிலாங்கூர் மாநிலம் அடிப்படையில் விவசாயம், தொழில் மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட நில பயன்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து வருவானத்தைப் பெறுகிறது.
மாநில வருவானம் வரிகள், பிரீமியங்கள் அல்லது நில உடைமைகளை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது என்பதற்காக இந்த உத்தி கையாளப்படுகிறது என்று அமிருடின் கூறினார்.


