ஷா ஆலம், மார்ச் 3: சமூக நலத்துறையில் (JKM) பதிவு செய்யப்படாத மொத்தம் 30 பராமரிப்பு மையங்கள் மாநில அரசு வழங்கும் பராமரிப்பு மைய மானிய (GPJ) உதவிக்கு விண்ணப்பித்துள்ளன.
இம்மானியத்திற்கு விண்ணப்பித்த அனைத்து பராமரிப்பு மையங்களும் விரைவில் ஒரு குழு கூட்டத்தில் மதிப்பீடு செய்யப்படும். இதன் மூலம், அப்பராமரிப்பு மையங்கள் RM5,000 மதிப்புள்ள உதவியைப் பெற முடியும் என்றும் நலன்புரி ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.
“இம்மானியத்திற்கு அனைத்து பராமரிப்பு மைய உரிமையாளர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் பதிவு ஒப்புதல் செயல்முறை கிட்டத்தட்ட முடிந்த அல்லது 20 சதவீதம் மீதமுள்ள பராமரிப்பு மையங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
“இதுவரை, விண்ணப்பித்தவர்களில் நர்சரி மற்றும் மூத்தக்குடிமக்கள் பராமரிப்பு மைய உரிமையாளர்களும் உள்ளனர். ஒப்புதல் பெற்ற பிறகு, சம்பந்தப்பட்ட தரப்பினர் அல்லது ஆலோசகர்களுக்கு உதவி நேரடியாக அனுப்பப்படும்,” என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பரில், சமூக நலத்துறையில் பதிவு செய்ய உரிமையாளர்களை ஊக்குவிப்பதற்காக, பதிவு செய்யப்படாத பராமரிப்பு மையங்களுக்கு சிறப்பு மானியத்தை சிலாங்கூர் அரசு அறிமுகப்படுத்தியது என்று அன்ஃபால் அறிவித்தார்.
RM400,000 ஒதுக்கீட்டில், மாநில அரசின் இந்த திட்டம் அனைத்து பகல்நேர பராமரிப்பு மையங்களும் பதிவு செய்யப்படுவதையும் சட்டத்திற்கு இணங்குவதையும் உறுதி செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று அன்ஃபால் கூறினார்.


