ஷா ஆலம், பிப். 28- ரமலான் மற்றும் அய்டில்பித்ரி சந்தைக்கான வர்த்தக உரிமங்களை மூன்றாம் தரப்பினரிடம் விற்கும் விஷயத்தில் கிள்ளான் அரச மாநகர் மன்றம் ஒருபோதும் சமரசப் போக்கை கடைபிடிக்காது.
இங்கு அமைக்கப்படும் 22 ரமலான் மற்றும் அய்டில்பித்ரி சந்தைகளில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு நடவடிக்கையை தமது தரப்பு தீவிரப்படுத்தும் என்று டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.
அனைத்து வர்த்தர்களும் சொந்தமாக வர்த்தகம் புரிய வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன். வர்த்தக உரிமங்களை விற்கவும் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் மாதாந்திர கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கிள்ளான் மாநகரின் 22 இடங்களில் திறக்கப்பட்டுள்ள 1,369 வர்த்தக இடங்களில் ரமலான் மாதத்தின் முதல் தேதியிலிருந்து வர்த்தகம் நடைபெறும் என அவர் சொன்னார்.
ஜாலான் தைப்பிங்கில் மொத்தம் 356 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ள வேளையில் அவை வரும் 7ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை செயல்படும் என்றார்.
இந்த கடைகளில் பெருநாளுக்குத் தேவையான பட்டாசுகள், மருதாணி பலுன்கள் குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்கப்படும். இங்கு இன்னும் 31 இடங்கள் வாடகைக்கு உள்ளன. முதலில் வருவோருக்கு முதல் சலுகை என்று அடிப்படையில் அக்கடைகளை வழங்குகிறோம். என்றார் அவர்.


