ஷா ஆலம், பிப். 25 - மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான முன்னோடித் திட்டமாக டிங்கி தடுப்பூசி இயக்கத்தை அமல்படுத்துவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த டிங்கித் தடுப்பூசித் திட்டத்தை சமூகத் தலைவர்களிடமிருந்து தொடங்குவது குறித்து தமது தரப்பு மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவுடன் கலந்தாலோசித்து வருவதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
சிலாங்கூர் சமூக சுகாதாரத் தன்னார்வலர்களையும் இந்த இந்த பரிந்துரை உள்ளடக்கியுள்ளது. இந்த முன்னெடுப்பு முன்களத்தில் நின்று சமூகப் பணியாற்றும் பொறுப்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
அதோடு மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கூடுதல் பங்காற்றவும் டிங்கித் தடுப்பு நடவடிக்கைகளை ஆக்ககரமான முறையில் சமூகத்தின் அடிமட்ட நிலைக்கு கொண்டு செல்லவும் இயலும் என அவர் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் உரை மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
டிங்கி தடுப்பூசித் திட்டம் தவிர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்புது, ஏடிஸ் கொசு உருவாகும் இடங்களை அடையாளம் கண்டு அழிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளையும் மாநில அரசு தொடரும் என அவர் குறிப்பிட்டார்.


