ஷா ஆலம், பிப். 21- பத்தாங் காலி, சுங்கை மாசின் ஜாமேக் பள்ளிவாசலில் இன்று அதிகாலை பால்ய வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சந்தேகநபர் மீது விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசலில் இத்தகைய இழி செயல் நிகழ்ந்திருக்க கூடாது என்று இஸ்லாமிய சமய விவகாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தலைவர் டாக்டர் முகமது ஃபாஹ்மி ங்கா கூறினார்.
கண்காணிப்பு கேமரா சிசிடிவி) காட்சிகள் மற்றும் வழங்கப்பட்ட புகைப்படங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தும் படி கோரி சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவருக்கு (டத்தோ ஹூசேன் ஓமார் கான்) நான் அறிக்கை அனுப்பியுள்ளேன் என்று அவர் சொன்னார்.
இச்சம்பவம் உண்மையாக இருந்தால் தற்போது உள்ள சட்ட விதிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பள்ளிவாசல்கள் பாதுகாப்பற்ற இடங்கள் என்றும் குற்றச் செயல்களுக்கு ஆளாகக்கூடியது என்றும் பொதுமக்களிடையே எதிர்மறையான கருத்தை ஏற்படுத்த இச்செயல் வழிவகுக்கும் என்று டாக்டர் முகமது ஃபாஹ்மி குறிப்பிட்டார்.
பள்ளிவாசலுக்கு வருவோர் விழிப்புடன் இருக்கவும் இத்தகைய முயற்சி நடந்தால் உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படியும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
இன்று காலை, சுபோஹ் தொழுகை நேரத்தில் மசூதியில் உள்ள பெண்கள் தொழுகை அறையில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.


