ஷா ஆலம், பிப். 21- சிலாங்கூர் ஆறுகளில் ஏற்பட்ட தூய்மைக்கேடு தொடர்பில் 80 சம்பவங்கள் கடந்தாண்டு கண்டறியப்பட்டதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
அந்த தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுக்கான காரணம் மற்றும் அதற்கு பொறுப்பானவர்களைக் கண்டறிவதற்காக லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் விசாரணை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.
விசாரணை அறிக்கை முழுமையான சம்பவங்கள் தொடர்பில் சட்டத்துறை அலுவலகத்தின் ஒப்புதலின் பேரில் 1999 ஆம் ஆண்டு லுவாஸ் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று கடந்தாண்டு முழுவதும் அடையாளம் காணப்பட்ட நீர் மாசுபாடு சம்பவங்கள் மற்றும் அதற்கு பொறுப்பானர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கை குறித்து தாமான் மேடான் உறுப்பினர் டாக்டர் அலிஃப் பஹாருடின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் ஜமாலியா இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆற்று நீர் தூய்மைக்கேடு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஸ்குவாட் இலிட் ஆயர் லுவாஸ் பணிப்படையின் வாயிலாக 24 மணி நேர கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் விவரித்தார்.
ஆற்றோரங்களில் உள்ள 50 மீட்டர் ரிசர்வ் நிலங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்டறிவதும் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் அடங்கும் என அவர் கூறினார்.


