ஷா ஆலம், பிப் 14 - கல்வியமைச்சரின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி
லோ கெர் சியோன் பத்தாங் காலி தமிழ்ப்பள்ளி உள்பட உலு சிலாங்கூரில்
உள்ள நான்கு பள்ளிகளுக்கு வருகை புரிந்தார்.
டத்தோ ஹாஜி கமாருடின் இடைநிலைப்பள்ளி, சைட் மஷோர்
இடைநிலைப்பள்ளி, பத்தாங் காலி தொடக்கப் பள்ளி மற்றும் செரெண்டா
சீனப் பள்ளி ஆகியவையே லோ வருகை புரிந்த பள்ளிகளாகும்.
இந்த வருகையின் போது அந்த நான்கு பள்ளிகளின் நிலை மற்றும் தரம்
உயர்த்த வேண்டிய அம்சங்கள் குறித்து லோ ஆய்வு செய்ததாகப் பத்தாங்
காலி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முகமது கூறினார்.
இவ்வாண்டில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து
முடிவெடுப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை விரிவாக
ஆராய்வதற்காகப் பத்தாங் காலி ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், உலு
சிலாங்கூர் நாடாளுமன்ற அலுவலகம் இணைந்து மாவட்ட கல்வி இலாகா
மற்றும் பள்ளி நிர்வாகங்களுடன் சந்திப்பை நடத்தும் என அவர்
சொன்னார்.
கல்வியமைச்சரின் சிறப்பு அதிகாரியின் இந்த வருகையின் போது உலு
சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ்
நடராஜன், கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ்
மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளும் உடனிருந்தனர்.


