ஷா ஆலம், பிப். 12- சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழக (பி.கே.என்.எஸ்.) குழுமத்திற்குச் சொந்தமான செல்கேட் ரவாங் மருத்துவமனை இவ்வாண்டு மத்தியில் செயல்படத் தொடங்கும்.
முன்னூற்றுக்கும் மேற்பட்ட படுக்கைகளை கொண்ட இந்த மருத்துவ மையம் சுற்றுவட்டாரத்திலுள்ள மக்களுக்கு பயனளிக்கும் என்பதோடு அரசு மருத்துவமனைகளில் நிலவும் நெரிசலையும் குறைக்க உதவும் என்றும் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் கூறினார்.
மொத்தம் 325 படுக்கைகளைக் கொண்ட இம்மருத்துவமனையின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட நிர்மாணிப்பு 23 கோடியே 15 லட்சம் வெள்ளி செலவை உள்ளடக்கியுள்ளது.
இந்த மருத்துவமனை செயல்படத் தொடங்கியதும் அரசு மருத்துவமனைகளில் நிலவும் அதிகப்படியான நோயாளிகள் எண்ணிக்கையை ஓரளவு குறைக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நிறைவடையவிருந்த செல்கேட் ரவாங் மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தாமதமானது என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் முன்னதாகக் கூறியிருந்தார்.


