ஷா ஆலம், ஜன, 31- இங்கு, ஸ்கைசிட்டி டவரிலுள்ள நீர் சறுக்கு விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்தும்படி இடப்பட்ட உத்தரவை பின்பற்ற தவறியதற்காக ஐ-சிட்டி நிர்வாகத்திற்கு எதிராக ஷா ஆலம் மாநகர் மன்றம் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
மிதவைக் குடுவை அதன் பயணத் தடத்திலிருந்து கழன்று வருகையாளர்கள் மீது விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநகர் மன்றம் கூறியது.
இந்த நீர் சறுக்கு விளையாட்டு நடவடிக்கையை நிறுத்தும்படி மாநகர் மன்றம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி உத்தரவிட்டதோடு அபராமும் விதித்ததாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுத் துறை இயக்குநர் முகமது அஸார் முகமது ஷாரிப் கூறினார்.
நடவடிக்கைகளை நிறுத்தும்படி இடப்பட்ட முதலாவது உத்தரவை ஐ-சிட்டி பின்பற்றத் தவறியதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு எதிராக நாங்கள் வழங்கிய இரண்டாவது அபராதம் இதுவாகும் என அவர் தெரிவித்தார்.
இதில் பொது மக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளது மாநகர் மன்றத்தின் கட்டிட மற்றும் அமலாக்கத் துறை சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வினை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
60 மீட்டர் உயரமும் 600 மீட்டர் நீளமும் கொண்ட ஐ-சிட்டியின் கண்ணாடி நீர் சறுக்கின் மீதிருந்த ஒரு மிதவைக் குடுவை கழன்று விழுந்ததைச் சித்தரிக்கும் 18 வினாடி காணொளி சமூக ஊடங்களில் வைரலானது.இந்த சம்பவம் வருகையாளர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது.
சுமார் ஒன்றரை கோடி வெள்ளி செலவில் கட்டப்பட்ட ஸ்கைசிட்டி டவர் மலேசியாவின் மிக உயரமான கண்ணாடி நீர்ச் சறுக்காக விளங்குகிறது.


