ஷா ஆலம், டிச. 10- புதிய மதிப்பீட்டு வரி மறுசீரமைப்பின்படி சிலாங்கூரிலுள்ள
சொத்து உரிமையாளர்கள் 100 விழுக்காட்டு வரியைச் செலுத்த வேண்டும்.
எனினும், மாநில அரசு அந்த வரியில் 75 விழுக்காடு வரை கழிவை வழங்குகிறது.
மாநில அரசின் இந்த சலுகையின் வழி எதிர்வரும் 2025 ஜனவரி முதல் தேதி
அமலுக்கு வரவிருக்கும் புதிய மதிப்பிட்டு வரியில் 25 விழுக்காட்டை மட்டுமே
அனைத்து ஊராட்சி மன்றங்களும் விதிக்கும் என்று ஊராட்சி மன்றத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
மதிப்பீட்டு வரியை 100 விழுக்காடு உயர்த்தினால் ஏற்படக்கூடிய நிதிச்சுமை
குறித்து சொத்து உரிமையார்களும் பங்களிப்பாளர்களும் வெளிப்படுத்திய
கவலையைக் கருத்தில் கொண்டு இந்த வரிச்சலுகையை மாநில அரசு
வழங்கியதாக நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்
குறிப்பிட்டார்.
நகரத் திட்டமிடலை ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்காக ஊராட்சி மன்ற நிலையில் புதிய மதிப்பீட்டு வரி அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மே மாதம் 30ஆம் தேதி கூறியிருந்தார்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்கள் 20 முதல் 40 ஆண்டுகளாக மதிப்பீட்டு வரியை மறு ஆய்வு செய்யவில்லை.
காஜாங் நகராண்மைக் கழகம் 39 ஆண்டுகளாக (1985) மதிப்பீட்டு வரியை உயர்த்தவில்லை. கோல லங்காட் நகராண்மைக் கழகம் 37 ஆண்டுகளாகவும் (1987), செலாயாங் நகராண்மைக் கழகம் 32 ஆண்டுகளாகவும் (1989) மதிப்பீட்டு வரியை மறுஆய்வு செய்யவில்லை.
சுபாங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மற்றும் பண்டார் சன்வே ஆகிய இடங்களுக்கான மதிப்பீட்டு வரியை கடந்த 1992ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கவில்லை. யுஎஸ்ஜே, பூச்சோங், ஸ்ரீ கெம்பாங்கான், மற்றும் செர்டாங் ஆகிய பகுதிகளில் கடந்த 1996 முதல் அதாவது 28 ஆண்டுகளாக வரி உயர்வை அமைல்படுத்தவில்லை.
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 28 ஆண்டுகளாகவும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் 27 ஆண்டுகளாகவும் ஷா ஆலம் மாநகர் மன்றம் 18 ஆண்டுகளாகவும் வரியை உயர்த்தவில்லை.


