(ஆர்.ராஜா)
கிள்ளான், டிச. 7- செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்
ஜி.குணராஜ் ஏற்பாட்டில் தெக்குன் ஸ்புமி வர்த்தக கடனுதவி தொடர்பான
விளக்கம் கூட்டம் தாமான் சொந்தோசாவில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டம் செந்தேசா எம்.பி.டி.கே. மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்
கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும்.
இந்திய சமூகத்தின் குறிப்பாக தொழில்முனைவோரின் மேம்பாட்டிற்கு
அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த திட்டம் தொடர்பான தகவல்களை
தொகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள இந்திய
வர்த்தகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த விளக்கக் கூட்டம்
நடத்தப்படுவதாக குணராஜ் தெரிவித்தார்.
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை, சில்லறை வணிகம்,
சேவை மற்றும் உற்பத்தி, சிறு குத்தகைத் தொழில், இணைய வர்த்தகம்
ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த தெக்குன் ஸ்புமி திட்டத்திற்கு
விண்ணப்பிக்கலாம் என அவர் சொன்னார்.
தங்கள் வர்த்தக விரிவாக்கத்திற்கு கடனுதவி பெற விரும்பும் தொழில்
முனைவோர், அடையாளக் கார்டு, வர்த்தக பதிவு சான்றிதழ்
(எஸ்.எஸ்.எம்.) ஊராட்சி மன்ற வர்த்தக லைசென்ஸ், வங்கி கணக்கறிக்கை
உள்ளிட்ட ஆவணங்களின் நகல் ஆகியவேற்றோடு தங்கள் வர்த்தக
நடவடிக்கைளைச் சித்தரிக்கும் புகைப்படங்களையும்உடன் கொண்டு
வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த தெக்குன் நேஷனல் கடனுதவி முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள
ஒன்பது திட்டங்களில் ஒன்றாக இந்த ஸ்புமி விளங்குகிறது.
இந்தியர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு
அரசாங்கம் 5 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள்
வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு ஏதுவாக 10,000 வெள்ளி முதல்
ஒரு லட்சம் வெள்ளி வரை இத்திட்டத்தின் கீழ்த கடனுதவி
வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் நான்கு விழுக்காடாக
மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ள வேளையில் இதற்கு நபர் உத்தரவாதம்
அல்லது சொத்து அடமானம் எதுவும் தேவையில்லை என்று குணராஜ்
விளக்கினார்.
செந்தோசா மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்கள் இந்த அரிய
வாய்ப்பினைப் பயன்படுத்தி இந்த விளக்கக் கூட்டத்தில் கலந்து
கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.


