ஷா ஆலம், டிச. 7- சட்டவிரோத வர்த்தக முத்திரையைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 6,000க்கும் மேற்பட்ட பொருள்களை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
சுமார் 37,000 வெள்ளி மதிப்பிலான இந்தப் பொருள்கள் இரு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் முகமது ஜூஹாரி மாட் ரேடேய் கூறினார்.
நேற்று நண்பகல் 12.00 மணியளவில ஷா ஆலம் மற்றும் கோல குபு பாருவில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் அமைச்சின் 30 அமலாக்க அதிகாரிகளோடு அசல் முத்திரை உரிமைப் பெற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கையில் கிள்ளானில் உள்ள பேரங்காடி ஒன்று முதன்மை இலக்காகக் கொள்ளப்பட்டதாக கூறிய அவர், அமைச்சின் ஷா ஆலம் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட அச்சோதனையில் பெண்களுக்கான வளையல், சங்கிலி, தோடுகள், கூந்தலைக் கட்டும் கிளிப் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.
ஆறு கடைகளை உள்ளடக்கிய அந்த பேரங்காடியிலிருந்து 20,000 வெள்ளி மதிப்பிலான 6,059 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
செரண்டாவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது நடவடிக்கையில் 17,000 வெள்ளி மதிப்பிலான 500 பொருள்கள் கைப்பற்றப்பட்டன. வீட்டிலிருந்தவாறு டிக் டாக் மூலம் இங்கு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார் அவர்.
இந்த பறிமுதல் தொடர்பில் 2019ஆம் ஆண்டு வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


