ஷா ஆலம், டிச. 7- தனது நிர்வாகத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மையை உறுதி செய்வதற்கான செயல் திட்டங்களை கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) வரைந்து வருகிறது.
கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த துப்புரவு செயல்திட்டம் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என்று கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.
கிள்ளான் நகரை எவ்வாறு தூய்மைப்படுத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக நாங்கள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்துகிறோம். கிள்ளான் நகர் முழுவதையும் துப்புரவு செய்வதற்கான செயல் திட்டத்தை வெகு விரைவில் வரையவிருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த துப்புரவுப் பணியை மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பான கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தவுள்ளோம். இது தவிர அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துவோம் என்று அவர் சொன்னார்.
இந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாத பட்சத்தில் மாநில அரசிடமிருந்து கூடுதல் நிதியைக் கோருவோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரச கிள்ளான் நகர் தூய்மை குறித்து நேற்று முன்தினம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், இந்த மாநகர் அசுத்தமாகவும் சீரற்றும் காணப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நகர் துரித வளர்ச்சி கண்டு வந்த போதிலும் ஆறுகள் உள்ளிட்ட பல இடங்கள் அசுத்தம் நிறைந்தும் குப்பைக் கூளங்கள் நிரம்பியும் காணப்படுகின்றன என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தி ஸ்டார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்


