ஷா ஆலம், டிச 6- கிள்ளான் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைக்குரிய வெள்ள தடுப்பு திட்டங்களின் பட்டியலை அரச கிள்ளான் மாநகர் மற்றும் (எம்.பி.டி.கே.) வரும் ஜனவரி மாதம் முன்வைக்கும்.
வெள்ளப் பிரச்சினையை விரிவாகக் கையாள்வதற்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்தப் பட்டியல் மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசேன் கூறினார்.
நான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் இப்போது தான் கலந்து கொண்டேன். அடுத்த ஜனவரி மாதம் வழங்குவதற்கு ஏதுவாக வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் பட்டியலைத் தயாரிக்கும்படி அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.
வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் பல்வேறு அம்சங்களில் சிக்கல்களை எதிர்கொள்ளும். குறிப்பாக, நீர், மின்சார மற்றும் நெடுஞ்சாலைத் தடங்கல்கள் காரணமாக திட்டங்கள் தாமதம் ஏற்படலாம் என என்று அவர் சிலாங்கூர் கினியிடம் கூறினார்.
கிள்ளான் அரச மாநகர் மன்றம் தற்போது 1.75 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் வடிகால் மேம்பாடு, நீர்ப்பிடிப்பு குளங்களை அமைத்தல் உள்ளிட்ட 15 வெள்ள தடுப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
தற்போது 10 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மீதமுள்ளவை விளம்பரம் மற்றும் பொருள் அளவிடும் பணியில் உள்ளன.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களை மாநகர் மன்றம் அடையாளம் கண்டுள்ளதாகவும் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் முழுமையான தீர்வு காணப்படும் என்றும் அவர் விளக்கினார்.
நேற்று, மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், கிள்ளான் அரச மாநகர் இன்னும் அசுத்தமானதாகவும் ஒழுங்கற்றதாக வும் இருப்பது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.








