கிள்ளான், டிச. 6- கிள்ளான் அரச மாநகர் அசுத்தமாகவும் சீரற்றும்
காணப்படுவது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின்
இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இம்மாநகர் துரித வளர்ச்சி கண்டு வந்த போதிலும் ஆறுகளில் குப்பைக்
கூளங்கள் நிறைந்தும் பல இடங்கள் அசுத்தம் நிறைந்தும்
காணப்படுகின்றன என்று அவர் சொன்னார்.
கோலக் கிள்ளான் மற்றும் கிள்ளான் நகர் மோசமாக மாசடைந்தும்
அருவருக்கத்தக்க வகையிலும் இருப்பது தொடர்பில் பொது
மக்களிடமிருந்து குறிப்பாக, சுற்றுலா கப்பல்களில் கோலக் கிள்ளான்
துறைமுகம் வரும் சுற்றுப்பயணிகளிடமிருந்து தாம் புகாரைப்
பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தூய்மை மற்றும் சுகாதாரம் தொடர்பான அடிப்படைப் பிரச்சனைகளுக்குத்
தீர்வு காண முடியாத நிலையில் துரித வளர்ச்சி குறித்து பெருமைப்பட்டுக
கொள்வதில் எந்த பயனும் இல்லை என்று அவர் சொன்னார்.
குப்பைக்கூளங்கள் நிறைந்த ஆறுகள், முறையாக பராமரிக்கப்படாத
மற்றும் குப்பைகளால் அடைபட்ட வடிகால்கள் காரணமாக கிள்ளானில்
அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது அவர் கூறினார்.
ஆகவே, வெள்ளப் பிரச்சனைக்கு சிலாங்கூர் மாநில அரசும் கிள்ளான் அரச
மாநகர் மன்றமும் (எம்..பி.டி.கே.) விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும்
அவர் வலியுறுத்தினார்.
இந்த வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக விரிவான
திட்டமும் சிறப்புக் குழுவும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சுல்தான்
உத்தரவிட்டார்.
கிள்ளான் அரச மாநகரிலும் சிலாங்கூரின் இதர மாவட்டங்களிலும்
அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு
ஆக்ககரமான திட்டங்களை வரையும்படி சிலாங்கூர் மாநில அரசுக்கும்
ஊராட்சி மன்றங்களுக்கும் நான் பல முறை உத்தரவிட்டுள்ளேன்.
இருந்த போதிலும், ஒவ்வோராண்டும் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டு
வருவதோடு சில வேளைகளில் அதனால் மோசமான தாக்கமும்
ஏற்படுகிறது. அதிகப்படியான மழைப் பொழிவு மற்றும் இறைவனின்
செயல் என்ற காரணத்தை எப்போதும் கூறிக் கொண்டிருக்கக் கூடாது
என்றார் அவர்.


