சிப்பாங், நவ. 29- இன்று காலை வெள்ளம் காரணமாக கீவா சாலை சந்திப்பு
பகுதியில் வாகனப் போக்குவரத்தை போலீசார் மூடினர்.
கோத்தா வாரிசான் முதல் பண்டார் பாரு சாலாக் திங்கி செல்லும் வழி
மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து
(கே.எல்.ஐ.ஏ.) கோத்தா வாரிசான் செல்லும் வழி ஆகியவை இன்று காலை
8.00 மணி முதல் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக சிப்பாங் மாவட்ட
காவல் துறை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக வாகனமோட்டிகளின் பாதுகாப்பு கருதி கோத்த
வாரிசான்-பண்டார் பாரு சாலாக் திங்கி சாலை தற்காலிகமாக
போக்குவரத்துக்கு மூடப்பட்டு மாற்று வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக
அது கூறியது.
இந்த சாலைகள் இன்று தொடங்கி அடுத்த அறிவிப்பு வரும் வரை
போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும் என அந்த பதிவு தெரிவித்தது.
அக்காலக்கட்டத்தில் வாகனமோட்டிகள் முழு ஒத்துழைப்பை வழங்கும்
அதேவேளையில் மாற்றும் வழிகளையும் பயன்படுத்தும்படி கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
கீவா சாலை சமிக்ஞை விளக்கு பகுதியில் போக்குவரத்து
மூடப்பட்டுள்ளதால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குச்
செல்வோர் மாற்று வழிகளைப் பயன்படுத்தும்படி கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.
புத்ரா ஜெயாவிலிருந்து வருவோர் செரேனியா டோல் சாவடியிலும்
கோத்தா வாரிசானிலிருந்து வருவோர் ஆயமாஸிலும் இறங்கி
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு பயணத்தை
தொடரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


