ஷா ஆலம், நவ. 28 - நேற்றுடன் முடிவுக்கு வந்த 15வது சட்டமன்றத்தின்
மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கூட்டத் தொடரில் பங்கேற்ற
உறுப்பினர்களின் விவாதத் தரம் குறித்து சபாநாயகர் லாவ் வேங் சான்
மனநிறைவு தெரிவித்தார்.
கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்ற இந்த கூட்டத் தொடரின் போது
தினசரி கூடுதலாக வழங்கப்பட்ட இரண்டு மணி நேர கால அவகாசம்
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் தங்கள்
வாதங்களை முன்வைப்பதற்கும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் தொகுதி
தொடர்பான பிரச்சினைகளை எழுப்புவதற்கும் முழுமையாகப்
பயன்படுத்திக் கொண்டதாக அவர் சொன்னார்.
நான் கவனித்த வரை, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களுக்கு
வழங்கப்பட்ட 15 நிமிட நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்
கொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றத்தின் நிர்வாக நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதில் கூடுதல்
நேர அவகாசம் முக்கியப் பங்கினை ஆற்றியது என்று அவர் தெரிவித்தார்.
கூட்டத் தொடரின் காலத்தை நீட்டிக்க முடியாது என்பதால் தங்களுக்கு
வழங்கப்பட்ட நேரத்தை உறுப்பினர்கள் முறையாக பகிர்ந்து கொண்டது
குறித்து நான் மனநிறைவு கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
இந்த கூட்டத் தொடரின் போது 104 வாய்மொழிக் கேள்விகளுக்கு
பதிலளிக்கப்பட்ட வேளையில் நான்கு சட்ட மசோதாக்களும் ஒன்பது
தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என்று நேற்று அனைக்ஸ்
கட்டிடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத் தொடரில் 2025ஆம் ஆண்டு விநியோக மசோதா, 2025ஆம்
ஆண்டு கூடுதல் விநியோக மசோதா, அரச சட்ட மசோதா மற்றும் உபகாரச் சம்பள நிதி திருத்த சட்ட மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன என்று அவர் சொன்னார்.


