ஷா ஆலம், நவ. 27- எதிர்வரும் 2031ஆம் ஆண்டில் 20 கோடி வெள்ளி லாப
வரம்பை அடைய பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இலக்கு
நிர்ணயித்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த் 2022ஆம் ஆண்டு தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்)
நிர்ணயித்த வீடுகள் அல்லாத வளாகங்களுக்கான நீர் கட்ட
மறுசீரமைப்பின் அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளதாக
அவர் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த நடவடிக்கைகளின் வாயிலாக லாபத்தை ஈட்டுவதற்கு ஆயர்
சிலாங்கூர் நிறுவனத்திற்கு காலக்கெடுவதை நிர்ணயிப்பதற்கான வர்த்தகத
திட்டத்தை மாநில அரசு ஸ்பானுக்கு அனுப்பியுள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று புக்கிட் காசிங் உறுப்பினர் ஆர்.ராஜீவ்
எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இழப்புகளைத் தவிர்ப்பதற்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் எடுத்து வரும்
நடவடிக்கைகள் குறித்து ராஜீவ் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதனிடையே, வீணாகும் நீரின் அளவை இவ்வாண்டு 27 விழுக்காடாக
குறைப்பதற்கு மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அமிருடின்
கூறினார்.
தற்போது வீணாகும் நீரின் அளவு 27.2 விழுக்காடாக உள்ளது. அந்த
அளவை இவ்வாண்டு இறுதிக்குள் 27 விழுக்காடாக குறைப்பதற்கான
சரியான தடத்தில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் பயணித்து வருகிறது
என்றார் அவர்.
வீணாகும் நீரின் அளவைக் குறைப்பதன் வாயிலாகவும் எதிர்வரும் 2031ஆம்
ஆண்டிற்குள் 20 கோடி வெள்ளி லாப வரம்பை அடையும் இலக்கை
அடைய முடியும் என்றார் அவர்.


