ஷா ஆலம், நவ 21: அடுத்தாண்டு மேலும் 10 ஏஹ்சான் மார்ட் கடைகளைத் திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை மலிவான விலையில் வாங்க உதவுவதற்காக இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என 2025 க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
இத்திட்டத்தை பற்றி சில நபர்கள் அவர்களின் கருத்தை சிலாங்கூர் இன்று உடன் பகிர்ந்து கொண்டனர்.
[caption id="attachment_518353" align="alignleft" width="197"]
ஷர்மினி நாயர்[/caption]
ஏஹ்சான் மார்ட் கடைகளில் சந்தை விலையை விட மிகவும் குறைந்த விலையில் அத்தியவசிய பொருட்களை வாங்க முடிவதாக திருமதி ஷர்மினி நாயர் (29) கூறினார். பொருட்களின் விலை குறைவாக இருந்தாலும் அவை தரமாக இருப்பதாக தெரிவித்தார். உதாரணத்திற்கு கோழி, முட்டை போன்ற பொருட்களை மலிவு விலையில் பெற முடிகிறது என கூறினார்.
ஆனால், கிள்ளானில் வசிக்கும் அவர் செலாயாங்கில் மட்டும் இருக்கும் ஏஹ்சான் மார்ட் கடைக்கு சென்று வருவது சற்று சிரமமாக இருப்பதாக கூறினார். அதனால், இக் கடைகளை பல இடங்களில் மாநில அரசாங்கம் திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
[caption id="attachment_518354" align="alignright" width="187"]
கலைச்செல்வி[/caption]
அதனை தொடர்ந்து, விலைவாசி அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஏஹ்சான் மார்ட் கடைகளால் பணத்தை மிச்சப்படுத்த முடிவதாக இல்லதரசியான திருமதி கலைச்செல்வி (51) கூறினார். அரசாங்கத்தின் இத்திட்டத்தால் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்க முடிகிறது என அவர் மகிழ்ச்சியாக கூறினார்.
இருப்பினும், கோம்பாக்கில் மட்டும் செயல்படும் ஏஹ்சான் மார்ட் கடை தனது வசிப்பு இடத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்திருப்பதனால் அவ்வப்போது மட்டுமே அங்கு சென்று பொருட்களை வாங்க முடிவதாக குறைப்பட்டுக் கொண்டார். அதனால், பொருட்களை எளிதாக வாங்குவதற்கு பல இடங்களில் அக்கடைகளை திறக்க அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன் மூலம் அதிகமான மக்கள் குறிப்பாக வசதி குறைந்த இந்தியர்கள் பயன் அடைய முடியும் என்றார்.


