(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 20- தீபாவளி பண்டிகை முடிந்து ஏறக்குறைய இரு
வாரங்கள் கடந்து விட்ட போதிலும் அந்த பெருநாள் குதூகலம் மக்கள்
மத்தியில் இன்னும் குறைந்து விடவில்லை என்பதற்கு ஆங்காங்கே
நடைபெறும் திறந்த இல்ல உபசரிப்புகள் அதற்கு சான்றாக
விளங்குகின்றன.
அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும்
தங்களுடனான தங்களின் அணுக்கமான நட்புறவை தொடரும் விதமாக
தொகுதி ரீதியாக தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வுகளை நடத்தி
வருகின்றனர்.
தாமான் டெம்ப்ளர் தொகுதி
தாமான் டெம்ப்ளர் தொகுதி செலாயாங் நாடாளுமன்றத் தொகுதியுடன்
இணைந்து தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வை அண்மையில் செலாயாங்
பங்சாபுரி பிரிமாவில் வெகு சிறப்பாக நடத்தியது. இந்த உபசரிப்பில்
செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங், தாமான்
டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான
அன்ஃபால் சாரி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த
நிகழ்வில் மூவினங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
கோல குபு பாரு தொகுதி
கோல குபு பாரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தோ
ஏற்பாட்டில் வார இறுதியில் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பு
நிகழ்வில் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்
டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் மற்றும் தொகுதி கவுன்சிலர்கள், சமூகத்
தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆடல், பாடல் நிகழ்வுகளோடு நடைபெற்ற அருசுவை உணவுடன் கூடிய
இந்த உபரிப்பு நிகழ்வில் வசதி குறைந்தவர்களுக்கு அன்பளிப்பும்
வழங்கப்பட்டது.
பாண்டான் இண்டா தொகுதி
பாண்டான் இண்டா தொகுதி நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பு
புளோக். 1, ஜாலான் பெர்சியாரான் பாண்டான் 3, பாண்டான் ஜெயா
எனுமிடத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த தீபாவளி உபசரிப்பு நிகழ்வுக்கு பண்டான் இண்டா சட்டமன்ற
உறுப்பினரும் அடிப்படை வசதிகள் மற்றும் விவசாயத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் சிறப்பாக ஏற்பாடு
செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இஷாம், இந்திய சமூகத்தின் கல்வி மற்றும்
சமய மேம்பாட்டிற்கு 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல்
நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இது போன்ற பொது உபசரிப்பு நிகழ்வுகள் நாட்டில் வாழும் பல்லின
மக்களிடையே ஒற்றுமை உணர்வு மேலோங்குவதற்கு பெரிதும் துணை
புரிவதாகவும் அவர் கூறினார்.


