சிப்பாங், நவ. 18 - உரிமைப் பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும் 138,000
வீடுகளில் குறைந்தது பத்து விழுக்காட்டிற்கு அடுத்தாண்டு தீர்வு காண
மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில அரசின் 2025 வரவு செலவுத் திட்டத்தில்
அறிவிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொடக்க தீர்வு நிதியின்
வாயிலாக அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் பட்டா
சிக்கலுக்கு தீர்வு காண இயலும் என்று வீடமைப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
இதுவே எங்களின் அடுத்தாண்டிற்கான இலக்காகும். மொத்தம் 138,000
குடியிருப்புகளுக்கான பட்டா பிரச்சினைக்கு இன்னும் தீர்வு
காணப்படவில்லை. சில பிரச்சனைகள் 30 ஆண்டுகளுக்குக்கும் மேலாக
நீடித்து வருகின்றன. அவற்றில் குறைந்தது 10 விழுக்காட்டிற்கு
அடுத்து ஆண்டில் தீர்வு காண திட்டமிட்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பட்டா விவகாரத்தில் மாநில அரசு நிறுவனங்கள், ஊராட்சி
மன்றங்கள், நில மற்றும் கனிம வளத்துறை, வீடமைப்பு நிறுவனங்கள்,
கூட்டு மேலாண்மை நிறுவனம் உள்ளிட்ட தரப்பினர்
சம்பந்தப்பட்டுள்ளதால் பூர்வாங்கப் பணிகளை மிகவும் துல்லியமாக
மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.
இவ்விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு சிறப்பு செயல்குழுவை அமைப்பது
தவிர்த்து தீர்வுக்கான வழிகளை கொண்டுள்ள சம்பவங்களை அடையாளம்
காணும்படி சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை
வாரியத்தை தாங்கள் கேட்டுக் கொண்டுள்ளதாகப் பொர்ஹான் சொன்னார்.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பது அவ்வளவு எளிதானப் பணியல்ல.
தீர்வு காண்பதற்கு குறைந்தது 50 விழுக்காடு சாத்தியமுள்ள வழக்குகளை
அடையாளம் காணும்படி அந்த வாரியத்தை நாங்கள் பணித்துள்ளோம்
என்றார் அவர்.
சிலாங்கூர் மாநிலத்தில் பட்டா பிரச்சனையை எதிர்நோக்கி வரும்
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உதவும் நோக்கில் ஒரு கோடி வெள்ளி
செலவில் சிறப்பு நிதி உருவாக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கடந்த வெள்ளிக்கிழமை மாநில சட்டமன்றத்தில் 2025
ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது
கூறியிருந்தார்.


