ஷா ஆலம், நவ. 18 - பொதுப் பணி இலாகாவின் கீழுள்ள சாலைகள்
சம்பந்தப்பட்ட மாலைச்சாரல் இடர் மற்றும் ஆபத்து தொடர்பான
வரைபடம் அடுத்தாண்டு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மண் சரிவு அபாயம் உள்ள மலைச்சாரல்களை அடையாளம் கண்டு
கண்காணிப்பதில் இந்த முன்னெடுப்பு பெரிதும் துணை புரியும் என்று
அடிப்படை வசதிகள் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம்
ஹஷிம் கூறினார்.
இது தவிர, மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் சம்பந்தப்படாத மலைச்
சாரல்கள் எதிர்நோக்கும் அபாயம் தொடர்பான வரைபடத்தை கனிமவளம்
மற்றும் புவி அறிவியல் துறை (ஜே.எம்.ஜி.) வரைந்து வருகிறது என்று
அவர் குறிப்பிட்டார்.
கோம்பாக், உலு சிலாங்கூர், உலு லங்காட் போன்ற உயர்நிலங்களை
உள்ளடக்கிய பகுதிகள் மீது இந்த வரைபடம் முக்கியத்துவம் அளிக்கும்
என்று இங்கு மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
நிலச்சரிவு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு மாநில அரசு எடுத்து வரும்
நடவடிக்கைகள் குறித்து கோலக் கிள்ளான் தொகுதி உறுப்பினர்
அர்மிஸாம் ஜமான்ஹூரி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
பல்வேறு பகுதிகளில் உள்ள மலைச்சாரல்களில் மண்சரிவு தொடர்பான
முன்னெச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார்.
பொதுப்பணித் துறை, ஜே.எம்.ஜி. மற்றும் ஊராட்சி மன்றங்களால்
உருவாக்கப்பட்ட முன்னெச்சரிக்கை முறை, நிலச் சரிவு பிரச்சினையைக்
கையாள்வதில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க
பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.
மேம்பாட்டுப் பணிகளால் மலைச்சாரல்களில் மண் சரிவு ஏற்படுவதை தவிர்ப்பதற்கும் சுற்றுவட்டாரத்தில் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கும் ஏதுவாக மலைப்பாங்கான இடங்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களில் இடைத்தடுப்பு மண்டலம் அமைப்பதையும் அந்த வழிகாட்டி வலியுறுத்தும் என்றார் அவர்.


