ஷா ஆலம், நவ. 15- அடுத்தாண்டு அனுசரிக்கப்பட விருக்கும் 2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கத்தை பிரபலப்படுத்துவதற்காக அதன் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதற்கு ஏதுவாக சுற்றுலா இடங்களை தரம் உயர்த்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சப்ரைஸிங் சிலாங்கூர் எனும் இயக்கத்தின் வாயிலாக சிலாங்கூரை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கே சபாக் பெர்ணம் முதல் கோல சிலாங்கூர் வரையிலும் தெற்கே சிப்பாங் முதல் கோல லங்காட் வரையிலும் உள்ளூர் சுற்றுலா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.
2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கத்தின் வாயிலாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 80 லட்சம் சுற்றுப் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 117 கோடி வெள்ளியை வருமானமாக ஈட்ட முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


