ஷா ஆலம், நவ. 15- வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மலேசிய விளையாட்டுப் போட்டியை (சுக்மா) எதிர் கொள்வதற்கு ஏதுவாக விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக மாநில அரசு 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
புதிய விளையாட்டாளர்களை அடையாளம் காண்பதற்கும் உபசரணை மாநிலம் என்ற முறையில் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 22வது சுக்மா போட்டிக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
விளையாட்டாளர்களின் ஈடுபாடு மற்றும் வெற்றியை உறுதி செய்வதற்கும் உயர் சாத்தியம் உள்ள விளையாட்டுகளின் மேம்பாட்டிற்கும் அதிக நிதி தேவைப்படுகிறது. இது அடிமட்ட நிலையிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று மாநில சட்டமன்றத்தில் இன்று 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டு சுக்மா போட்டியை சிலாங்கூர் ஏற்று நடத்தும் என சுக்மா உயர்மட்டக் குழு கடந்த ஜூலை மாதம் முடிவு செய்தது. ஆகக் கடைசியாக கடந்த 1998 ஆம் ஆண்டு சிலாங்கூர் இப்போட்டியை ஏற்று நடத்தியது.


