கிள்ளான், நவ.13 - நேற்று சில மணி நேரங்கள் நீடித்த வழக்கத்திற்கு மாறான கனமழை காரணமாக கிள்ளான் உட்பட பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
இந்த வாரம் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடல் பெருக்கு நிகழ்வும் இதற்கு காரணமாக அமைந்ததாகக் கூறிய நஜ்வான் ஹலிமி, இதனால் பல குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் வெள்ளத்தில் மூழ்கின என்றார்.
தாமான் முத்தியாரா, புக்கிட் ராஜா 2ல் உள்ள பம்ப் ஹவுஸ் எனும் நீர் இறைப்பு மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அப்பகுதி மக்கள் மேலும் பாதிக்கப்படாமல் இருக்க நீர்த்தேக்க குளத்தை நிர்மாணிக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.
கடந்த அக்டோபரில் முடிக்கப்பட வேண்டிய நீர்த்தேக்க குளத்தின் கட்டுமானப் பணிகளை விரைவு படுத்துமாறு நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் இலாகாவை (ஜேபிஎஸ்) கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
நீர் சேகரிப்பு குளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் தற்போதைக்கு, வெள்ள நீர் நிரம்பி வழியும் பட்சத்தில் குடியிருப்பாளர்கள் பம்ப் ஹவுஸை மட்டுமே நம்பியுள்ளனர் என்று அவர் இன்று அப்பகுதியை ஆய்வு செய்த பின்னர் கூறினார்.
இதனிடையே, வடிவமைப்பு உட்பட பல சிக்கல்கள் காரணமாக நீர்த்தேக்க குளத்தின் நிர்மாணிப்பு பணிகள் தாமதமானதாக ஜே.பி.எஸ். சுற்றுச்சூழல் நட்புறவு வடிகால் மற்றும் கால்வாய் பிரிவின் மூத்த உதவி இயக்குனர் ஜூராய்டி ஜலால் கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கோவிட்-19 தொற்றுநோய் பரவல் தவிர, கிராண்ட் ஷாபாடு நிறுவனத்துடனான அனுமதிச் சிக்கலும் தாமதத்திற்கு காரணமானது என்று அவர் விளக்கினார்.


