ஷா ஆலம், அக். 5- வடகிழக்கு பருவமழை காலம் இன்று தொடங்கும் நிலையில் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்கான தகவல்கள் அடங்கிய வழிகாட்டியை ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஏ.) வெளியிட்டுள்ளது.
வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதில் பொது மக்களும் வாகனமோட்டிகளும் மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் அறிவுறுத்தியது.
அவசியம் ஏற்படும் பட்சத்தில் தயார் செய்யப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையங்களுக்கு இடம் பெயரும்படி விடுக்கப்படும் உத்தரவுகளை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.
ஷா ஆலம் வட்டாரத்தில் வெள்ளம் தொடர்பான அவசர வேளைகளில் உதவிகளைப் பெறுவதற்கு விரைவு நடவடிக்கைக் குழுவின் செயல்பாட்டு அறையை (பந்தாஸ்) 03-55105811 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு மாநகர் மன்றம் அறிவுறுத்தியது.
வெள்ளத்தின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வருமாறு-
வெள்ளத்திற்கு முன்
1. வெள்ள அபாயம் குறித்து விழிப்புடன் இருங்கள்
2- முக்கிய ஆவணங்களை நீர்புகாத பெட்டகங்களில் பாதுகாப்பாக வையுங்கள்.
3. அவசரகால பைகளைத் தயார் செய்து கொள்ளுங்கள்.
4. அதிகாரிகளின் உத்தரவுக்கேற்ப உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுங்கள்.
வெள்ளத்தின் போது
1. நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து வெள்ள நிலைமை குறித்த தகவல்களைப் பெறுங்கள்
2. பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுங்கள்
3. உலர்ந்த மற்றும் சுத்தமான உணவுகளை உண்ணுங்கள்
வெள்ளத்திற்குப் பின்
1. நிலைமை பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்தப் பின்னர் வீடு திரும்புங்கள்.
2. காலணி அணிந்து வீட்டினுள் நுழையுங்கள்
3. உங்கள் இருப்பிடத்தை குடும்பத்தாரிடம் தெரிவியுங்கள்
4. வீட்டையும் பொருள்களையும் சுத்தம் செய்யுங்கள்
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.


