(ஆர்.ராஜா)
ரவாங், அக் 28 - சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி ஜோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ் 200 வெள்ளி மதிப்புள்ள 450 பற்றுச் சீட்டுகள் ரவாங் தொகுதி இந்தியர்களுக்கு நேற்று வழங்கப்பட்டன.
ரவாங், என்.எஸ்.கே. பேரங்காடியில் நடைபெற்ற தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கலந்து கொண்டார்.
இந்த பற்றுச் சீட்டுகளைப் பெற்றவர்கள் அதனைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை இப்பேரங்காடியில் வாங்கிக் கொண்டனர்.
இத்தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பற்றுச் சீட்டுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனக் கூறிய ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா, இப்பெருநாள் காலத்தில் ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் சுமையைக் குறைப்பதற்கு வேறு உதவித் திட்டங்களை தாங்கள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் உதவித் திட்டங்கள் வாயிலாக தொகுதியைச் சேர்ந்த 1,200 குடும்பங்கள் வரை பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என அவர் சொன்னார்.
தங்களின் நிதி சுமையைக் குறைப்பதற்காக மாநில அரசாங்கம் வழங்கியிருக்கும் இந்த பற்றுச் சீட்டுகள் இத்தருணத்தில் தங்களுக்கு பேருதவியாக இருந்தது குறித்து பொது மக்கள் மனநிறைவு தெரிவித்தனர்.
இந்த இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்தின் வழி தங்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்கு உதவிய மாநில அரசாங்கத்திற்கும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் அவர்கள் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்


