(ஆர்.ராஜா)
அம்பாங், அக். 23 - விரைவில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு தெராத்தாய் தொகுதியில் உள்ள 450 வசதி
குறைந்த குடும்பங்களுக்கு மாநில அரசின் வாயிலாக உதவி
வழங்கப்பட்டது.
மாநில அரசின் தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுத் திட்டத்தின் கீழ்
350 பேர் தலா 200 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டுகளைப் பெற்ற
வேளையில் மேலும் 100 பேருக்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார்
கழகத்தின் வாயிலாக 100 உணவுக் கூடைகள் விநியோகிக்கப்பட்டன.
இம்மாதம் 20ஆம் தேத ஞாயிற்றுக் கிழமை தெராத்தாய் சட்டமன்றத்
தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற உணவுக் கூடை வழங்கும்
நிகழ்வில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர்
இயு ஜியா ஹவுர், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர்
ஆர்.மோகன் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தொகுதி இந்திய
சமூகத் தலைவர் கி. சரஸ்வதி கூறினார்.
இந்த நிகழ்வில் தொகுதி சேவை மையத்தைச் சேர்ந்த 100 பேருக்கு
எம்.பி.ஐ. வழங்கிய 100 உணவுக் கூடைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன என்று
அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசின் மற்றொரு பெருநாள் கால சிறப்புத் திட்டமான ஷோம்
ஷோப்பிங் இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்தின் கீழ் தெராத்தாய் தொகுதியைச் சேர்ந்த 350 பேருக்கு பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இவ்வார இறுதியில் இங்குள்ள பாரகோன் தாமான் மூடா, என்.எஸ்.கே.
பேரங்காடியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமபந்தப்பட்டவர்களுக்கு
பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டதாகக் கூறிய சரஸ்வதி, பெருநாளைக்
கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும் சுமையைக்
குறைக்கும் நோக்கில் மாநில அரசு வழங்கிய இந்த உதவிக்கு தாங்கள்
நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.


