ஷா ஆலம், அக் 16 - பத்து 11, கம்போங் சுங்கை செராய்யில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டுசுன் துவா தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவிகளை வழங்கினர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டு சுங்கை செராய் தேசிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹான் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
இந்த தன்னார்வக் குழு கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரிய அளவிலான வெள்ளத்தின் போது 13 படகுகளுடன் நிறுவப்பட்டது. அவர்கள் மலேசிய பொது தற்காப்புத் துறையின் மூலம் பயிற்சி பெற்று படகுகளைக் கையாளும் அடிப்படைத் திறன்களைக் கொண்டுள்ளனர் என அவர் சொன்னார்.
கம்போங் சுங்கை லூய் மற்றும் கம்போங் சுங்கை ஜாவா ஆகியவை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளாகும். தற்போது வெள்ளம் குறையத் தொடங்கியுள்ளது. தன்னார்வப் குழுவினர் இப்போது பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துகின்றனர் என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழகுங்குவதற்காக தாங்கள் 1,500 உணவுப் பொட்டலங்களைத் தயாரித்ததாக ஜோஹன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் அரசு சாரா அமைப்பு ஒன்றினால் செயல்படும் தற்காலிக நிவாரண மையத்தில் நானே சமைக்க முயற்சி எடுத்தேன் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று மதியம் முதல் இரவு வரை பெய்த தொடர் மழையால் சிலாங்கூர் மாநிலத்தின் உலு லங்காட்டில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.


