பெஸ்தாரி ஜெயா, அக் 16- மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் மேற்கொண்ட முயற்சியின் பலனாக பேறு குறைந்த பத்திரிகையாளர் லோகநாதன் குல்லாயிரத்திற்கு இன்று தகவல் தொடர்பு துறை அமைச்சின் கீழ் Kasih@HAWANA நிதியுதவி கிடைக்கப்பெற்றது.
முன்னாள் தமிழ்நேசன் - மலேசிய நண்பன் பணியாளரான லோகநாதன் தற்போது வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறார். இவர் பெற்றோரை இழந்து தனியாக இருக்கிறார்.
பெஸ்தாரி ஜெயா, தாமான் சூரியாவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக வருகை புரிந்த தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நி சிங் நலம் விசாரித்து Kasih@HAWANA நிதியுதவியை வழங்கினார்.
மேலும் தீபாவளியை முன்னிட்டு பரிசு கூடைகளையும் வழங்கி லோகநாதனுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன், பெர்னாமா செய்தி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் அருள் குமார், மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் உதவித் தலைவர் காளிதாஸ் இளங்கோ, ரவி முனியாண்டி மற்றும் செயலவை உறுப்பினர் இராமன் குட்டி ஆகியோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் செயலவை உறுப்பினர்கள் தகவல் தொடர்பு துறை அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
தமிழ் ஊடகங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணிபுரிந்து கொண்டிருக்கும் பலர் நோய்களின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் தொடர்பு துறை அமைச்சின் பெர்னாமாவின் கீழ் இயங்கும் காசோ அவனா திட்டத்தின் கீழ் உதவும் படி மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் முன் வைத்த கோரிக்கையை அமைச்சு உடனடியாக ஏற்றுக கொண்டது.
இதன் வாயிலாக இன்று முதல் உறுப்பினராக லோகநாதனுக்கு Kasih@HAWANA.நிதியுதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினருக்கு உதவிக்கரம் நீட்டிய தகவல் தொடர்பு துறை அமைச்சுக்கு சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்த நிதியுதவி விரைந்து கிடைக்க பேருதவி புரிந்த பெர்னாமா செய்தி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் அருள் குமாருக்கும் மனமார்ந்த நன்றியை மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துக் கொண்டது.


