ஷா ஆலம், அக். 15 - இன்று காலை அம்பாங், தாமான் மெலாவத்தியிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பில் விரிவான விசாரணை நடத்தும்படி பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்ட நந்தா லிங்கி உத்தரவிட்டுள்ளார்.
ஜாலான் இ6 மற்றும் ஜாலான் ஜி2 ஆகிய சாலைகளின் அருகே இன்று
காலை 10.15 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் நான்கு வீடுகளும் ஒரு
வாகனமும் சேதமுற்றன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிடற்சேதம்
அல்லது காயம் ஏற்படவில்லை.
தாமான் மெலாவத்தியில் நிலச்சரிவு ஏற்பட்டது குறித்து எனக்குத் தகவல்
அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி
அறிக்கை சமர்ப்பிக்கும்படி பொதுப்பணி இலாகாவை நான் பணித்துள்ளேன்
என்று அலெக்சாண்டர் கூறினார்.
ஜாலான் ஜி2 சாலையிலுள்ள உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு
நீரோட்டம் தடைபட்டதால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது பொதுப் பணி
இலாகாவின் தொடக்கக் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று அவர்
தெரிவித்தார்.
இதன் தொடர்பில் நேற்று மாலை 4.37 மணியளவில் “அபாய“
சமிக்ஞையை வெளியிட்ட பொதுப்பணித் துறையின் மலைச்சாரல்
பொறியியல் பிரிவு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி
கோம்பாக் மற்றும் உலு லங்காட்டில் உள்ள ஊராட்சி மன்றங்களுக்கு
உத்தரவிட்டது. இந்த எச்சரிக்கை பின்னர் அம்பாங் ஜெயா நகராண்மைக்
கழகத்தின் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டது.
இந்த நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து விரிவான மதிப்பீடுகளைச்
செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வினை மேற்கொள்ளுமாறு மலைச்சாரல் பொறியியல் துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


