ஷா ஆலம், அக். 11- தெராத்தாய் சட்டமன்றத் தொகுதியின் இந்திய சமூகத்
தலைவர் கே.சரஸ்வதி ஏற்பாட்டில் இவ்வார இறுதியில் இரண்டு
நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.
பெண்களுக்கான சேலை உடுத்தும் மற்றும் மடிக்கும் பயிற்சி நாளை
அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி தொடங்கி
கம்போங் செராஸ் பாரு பாலாய் ராயாவில் நடைபெறும்.
மறுநாள் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மகளிருக்கான மருதாணி
இடும் பயிற்சி நடைபெறவிருக்கிறது. இந்த பயிற்சி பாண்டான் இண்டா,
ஜாலான் பண்டான் இண்டா 5/12, சமூக மண்டபத்தில் காலை 9.30 முதல்
நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலை உடுத்தும் மற்றும் மடிக்கும் பயிற்சியில் 20 பேர் வரை பங்கேற்பர்
எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக சரஸ்வதி கூறினார். தீபாவளி போன்ற
பண்டிகை காலங்களில் நமது பாரம்பரிய உடையான புடவையை மகளிர்
உடுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சேலைகட்டத் தெரியாத காரணத்தால் பலர் நமது கலாசார உடைகளை
உடுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையை மாற்றும் விதமாக
பெண்களுக்கு சேலை கட்டும் பயிற்சியை வழங்குகிறோம். இந்த
பயிற்சியைப் பெற்றவர்கள் உபரி வருமான ஈட்டுவதற்கு ஏற்ற பகுதி நேரத்
தொழிலாகவும் இதனை மேற்கொள்ள முடியும்.
அதே போல் சுப வைபவங்களில் மருதாணி இடுவதும் கலாசாரத்தின் ஒரு
பகுதியாக விளங்குகிறது. நமது பண்பாட்டைக் கட்டிக்காக்கும் அதே
வேளையில் வருமானம் ஈட்டுவதற்குரிய வாய்ப்பினையும் இந்த கலை
வழங்குகிறது. இதன் அடிப்படையில் இந்த பயிற்சிக்கும் ஏற்பாடு
செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.


