ஷா ஆலம், அக். 11- சிலாங்கூர் அனைத்துலக புத்தக விழா 2024 எதிர்வரும்
நவம்பர் 27 தொடங்கி டிசம்பர் 3 வரை செத்தியா சிட்டி மாநாட்டு
மையத்தில் நடைபெறவுள்ளது.
ஏழு நாட்களுக்கு நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் 300,000க்கும்
அதிகமானோர் வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர்
பொது நூலகக் கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமது
கூறினார்.
இந்த புத்தக விழாவையொட்டி 400 கண்காட்சிக் கூடங்கள்
திறக்கப்பட்டுள்ள வேளையில் இங்கு தேசிய இலக்கியவாதிகளுடன்
கலந்துரையாடல், வர்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல் மற்றும்
அதிர்ஷ்டக் குலுக்கு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இம்முறை நடைபெறும் புத்தக விழாவில் இந்தோனேசியா, சவுதி
அரேபியா மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த
கண்காட்சியாளர்கள், பதிப்பகத்தினர், எழுத்தாளர்கள் மற்றும் புத்தகத்
தொழில்துறையினர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் பொது நூலகக் கழகத்திற்கும் வட சீன புத்தக விழா
குழுவினருக்கும் இடையே கடந்த ஆகஸ்டு மாதம் 16ஆம் தேதி
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதன் அடிப்படையில் இந்த
விழாவுக்கு சீனா கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது என்றும்
அவர் குறிப்பிட்டார்.
மேலும், திவேட் எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் கல்வி,
அறிவியல், கணிதம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (ஸ்டெம்)
ஆகிய துறைகளுக்கு ஆக்கத்திறனளிக்கும் முயற்சியாக இந்த புத்தக விழாவின் போது சிலாங்கூர் கல்வி உச்சநிலை மாநாடும் நடத்தப்படும் என்று மஸ்துரா சொன்னார்.
கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 16 ஆண்டுகளாக நடத்தப்பட்டு
வந்த சிலாங்கூர் புத்தக வழி 2022ஆம் ஆண்டு முதல் அனைத்துலகப் புத்தக
விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.


