(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 7- இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
மாநில அரசு வழங்கும் இலவச ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளுக்கு
சுமார் ஆயிரம் விண்ணப்பங்களை கோத்தா கெமுனிங் சட்டமன்றத்
தொகுதி பெற்றுள்ளது.
இந்த தொகுதிக்கு இம்முறை 450 பற்றுச்சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள
நிலையில் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை முழுமையாகப் பூர்த்தி செய்த
விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி தற்போது
மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமன்ற உறுப்பினர் சொன்னார்.
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள்
எதிர்நோக்கும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் மாநில
அரசு குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காக கொண்டு
தலா 200 வெள்ளி மதிப்புள்ள இந்த பற்றுச்சீட்டுகளை வழங்கி வருவதாக
அவர் குறிப்பிட்டார்.
இந்த பற்றுச்சீட்டுகளுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 17ஆம் தேதி
திறக்கப்பட்ட நிலையில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட
விண்ணப்பங்களை நாங்கள் பெற்றுள்ளோம்.
அந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக மாநில அரசிடம்
ஒப்படைக்கப்பட்டு தேர்வு பெற்றவர்களின் பட்டியல் தொகுதி சேவை
மையத்திடம் வழங்கப்பட்டப் பின்னர் அந்த பற்றுச் சீட்டுகளை
சம்பந்தப்பட்டவர்களின் ஒப்படைக்கும் நிகழ்வை பின்னர் அறிவிக்கப்படும்
தேதியில் தாமான் ஸ்ரீ மூடா மைடின் பேரங்காடி வளாகத்தில்
நடத்துவோம் என்றார் அவர்.
மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பத்தினரை
இலக்காக கொண்டு இந்த பெருநாள் கால ஜோம் ஷோப்பிங் திட்டத்தை
மாநில அரசு அமல்படுத்தி வருகிறது.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளியை முன்னிட்டு 44 லட்சம் வெள்ளி செலவில் 22,000 இலவச
பற்றுச் சீட்டுகளை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 56
தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் வசதி குறைந்தவர்களுக்கு இந்த பற்றுச்
சீட்டுகள் வழங்கப்படும்.


