கோலாலம்பூர், செப். 18 - உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் பயனீட்டாளர் அதிகாரமளிப்பு துணைப் பொதுச்செயலாளர் டத்தோ ஜக்காரியா ஷபான் குடிநுழைவுத் துறையின் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் நேற்று முதல் அமலுக்கு வருகிறது.
தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்தின் (ஏ.ஏ.டி.கே. ) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட டத்தோ ருஸ்லின் ஜூசோவுக்குப் பதிலாக அவர் இப்பதவியை ஏற்றுள்ளார்.
ருஸ்லினிடமிருந்து ஜக்காரியா பதவி ஏற்கும் நிகழ்வு புத்ராஜெயாவில் உள்ள அதன் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றதாகக் குடிநுழைவுத் துறை கூறியது.
பொது சேவைத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவத்தைக் கொண்ட ஜக்காரியா, உள்நாட்டு வர்த்தக அமைச்சில் தனது பணியைத் தொடக்கினார்.
கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரிய அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு உட்பட பல்வேறு அமைச்சுகள் மற்றும் அரசு துறைகளில் அவர் பணியாற்றியுள்ளார்.
பொதுச் சேவைத் துறை, விவசாயம் மற்றும் வேளாண் தொழில்துறை அமைச்சு, பிரதமர் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் குடிநுழைவுத் துறை ஆகியவற்றிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2023 மார்ச் 22ஆம் தேதி முதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றிய ரஸ்லினின் சேவைக்காக குடிநுழைவுத் துறை தனது பாராட்டுகளைத் தெரிவித்தது.
இதற்கிடையில், ஏ.ஏ.டி.கே.வின் 13வது தலைமை இயக்குநராக ருஸ்லின் நியமிக்கப்பட்டதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது.
மனித வள அமைச்சின் துணைப் பொதுச்செயலாளராக (நடவடிக்கை) மாற்றப்பட்ட சுடெக்னோ அகமது பெலோனுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


