(ஆர்.ராஜா)
கிள்ளான், செப். 16- கோலக் கிள்ளான் சட்டமன்றத் தொகுதியின் இந்திய சமூகத் தலைவர் (கே.கே.ஐ.) தீபா மோகன் ஏற்பாட்டில் கேக் தயாரிக்கும் பயிற்சி கடந்த சனிக்கிழமை இங்குள்ள தொகுதி சேவை மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை இலக்காகக் கொண்ட இந்த ஒரு நாள் பயிற்சியில் தொகுதியைச் சேர்ந்த 45 மகளிர் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொகுதியிலுள்ள இந்திய மகளிர் உபரி வருமானம் பெறுவதற்கு ஏதுவாக கைத்தொழிலைக் கற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்கு ஊக்கமூட்டும் வகையில் ஆதரவு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று தீபா மோகன் கூறினார்.
இந்திய சமூகத் தலைவராக பொறுப்பேற்றப் பின்னர் முதன் முறையாக தாம் நடத்திய இந்த கேக் தயாரிப்பு பயிற்சிக்கு கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி முழு ஆதரவு வழங்கியதாக அவர் சொன்னார்.
மூவின மக்களையும் உட்படுத்திய உணவுத் தயாரிப்பு மற்றும் கைத்தொழில் பயிற்சிகள் தொகுதி நிலையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பயிற்சித் திட்டம் வெற்றிகரமாக அமைவதற்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பை நல்கிய பங்கேற்பாளர்கள், ஏற்பாட்டுக்குழுவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தீபா கூறினார்.








