(ஆர்.ராஜா)
ஷா ஆலம், செப். 15- சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ள அபாயம் உள்ள
இடங்களில் ஒன்றாக விளங்கும் இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ
மூடாவில் பல்வேறு வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
மத்திய அரசு மற்றும் மாநில அரசினால் மேற்கொள்ளப்படும் இந்த
திட்டங்களின் மேம்பாட்டை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்
எஸ்.பிரகாஷ் அணுக்கமாக கண்காணித்து வருகிறார்.
பருவமழையின் காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைக்
கருத்தில் கொண்டு இந்த வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட
காலத்திற்குள் முடிக்கப்படுவதை உறுதி செய்வதில் அவர் தீவிரமாக
செய்ல்பட்டு வருகிறார்.
இதன் அடிப்படையில் இங்குள்ள பெர்சியாரான் புடிமான் 25/35 மற்றும் 25/39
சாலைகளில் ஷா ஆலம் மாநகர் மன்றம் அமைத்துள்ள வெள்ள நீர்
இறைப்பு பம்ப் இயந்திரங்களின் நிர்மாணிப்புப் பணிகளை பிரகாஷ் நேற்று
பார்வையிட்டார். ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜனும்
அப்போது உடனிருந்தார்.
இந்த இரு பம்ப் இயந்திரங்களை பொருத்தும் வேலைகள் ஏறக்குறைய
முடிவடைந்துள்ள நிலையில் அந்த இயந்திரங்களுக்கு மின்சார
இணைப்பை ஏற்படுத்தும் பணி மட்டுமே இன்னும் பாக்கி உள்ளதாக
பிரகாஷ் கூறினார்.
இந்த திட்டங்கள் முற்றுப் பெற்றதும் மழை காலத்தில் குடியிருப்பு
பகுதிகளில் பெருக்கெடுக்கும் நீரை இந்த இயந்திரங்களைக் கொண்டு
விரைவாக கிள்ளான் ஆற்றில் இறைத்து வெளியேற்ற முடியும் என்று
அவர் சொன்னார்.
ஸ்ரீ மூடாவில் சுமார் பத்து கோடி வெள்ளி செலவில் முழுமையான
வெள்ளத் தடுப்புத் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக
பிரகாஷ் முன்னதாக கூறியிருந்தார்.

இந்த குடியிருப்பு பகுதியின் அருகிலுள்ள கிள்ளான் ஆற்றின் கரைகளை உயர்த்துவது, வெள்ள நீர் சேகரிப்பு குளங்களை அமைப்பது,
வடிகால்களைத் தரம் உயர்த்துவது உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய இத்திட்டம் வரும் 2029ஆம் ஆண்டு முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அரசின் திட்டங்கள் தவிர்த்து மாநில அரசும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் மூலம் பல்வேறு வெள்ளத் தணிப்புத் திட்டங்களை இங்கு
மேற்கொண்டு வரும் தகவலையும் அவர் வெளியிட்டார்.
இப்பகுதியில் ஏற்கனவே மூன்று நீர் இறைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள வேளையில் கூடுதலாக 70 லட்சம் வெள்ளி செலவில்
அதிநவீன நீர் இறைப்பு இயந்திரம் ஒன்றும் இங்கு நிறுவப்பட்டுள்ளது என்றார் அவர்.


