ஷா ஆலம், செப். 15 - குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங் (ஜி ஐ.எஸ்.பி எச்.) மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புடைய அனைத்து சமூகநல இல்லங்கள் மற்றும் சமயப் பள்ளிகள் குறித்து உடனடி விசாரணை நடத்தும்படி சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகாவுக்கு (ஜாய்ஸ்) . இஸ்லாமிய சமய மன்றம் (மாய்ஸ்) உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாத்தின் உண்மையான போதனைகளுக்கு முரணான எந்த நடைமுறைகளும் பிரச்சாரம் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக இச்சோதனை மேற்கொள்ளப்படுவதாக மாய்ஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஜிஸ் முகமது யூசுப் கூறினார்.
சமூக நல இல்லங்கள் மற்றும் சமயப் பள்ளிகள் இஸ்லாத்தில் இருந்து விலகி தவறான போதனைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் 1995ஆம் ஆண்டு ஷரியா குற்றவியல் சட்டத்தின் (சிலாங்கூர்) கீழ் வழக்குத் தொடரப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இத்தகைய சூழல்களில் 1988ஆம் ஆண்டு இஸ்லாமிய சமயப் பள்ளிகளின் ஒழுங்குமுறையின் கீழ் பள்ளிகளின் பதிவு ரத்து செய்யப்படலாம் என்று அப்துல் அஜீஸ் எச்சரித்தார்.
சிலாங்கூரில் உள்ள இஸ்லாமியப் பள்ளிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் இஸ்லாத்தில் இருந்து விலகிய போதனைகளைப் பரப்புவது குறித்த புகார்களை மாய்ஸ் கடுமையாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தின் உண்மையான போதனைகளிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ள தவறான போதனைகள் அல்லது நம்பிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு சிலாங்கூரில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் அவர் அறிவுறுத்தினார்.


